மரபை மறவோம் #01
பழங்காலத்தில் பெண்கள் அதிகம் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை என்பது யாவரும் அறிந்ததே! இருப்பினும் காதற் களவியல் எவ்வித குறையும் இன்றி தழைத்தோங்கியது நம் இலக்கியங்களில் இருந்து தெளிவாகின்றது. இது எப்படி சாத்தியம்?
தைப்பொங்கலுக்கு முன்பு வரும் மார்கழித்திங்கள் காதலின் திங்கள் !
மார்கழிக்குளிரில் அதிகாலை துயிலெழுந்து, பொய்கையில் நன்னீராடி,பூக்களைக் கொய்து, வாசலில் வண்ணக்கோலங்களாய் கலைத்திறமை காட்டி, சாணப் பிள்ளையார் பிடித்து அழகுற அமைத்து, செம்பருத்தி, பூசணி, தங்க அரளி, பீர்க்கம்பூ போன்ற பூக்களால் சாணப் பிள்ளையார்களை அலங்கரித்து வைப்பர். பின்பு மதிய வேளையில் பூவுடன் சேர்த்து சாணப்பிள்ளையார்களையும் வறட்டி தட்டி வீட்டுக்கூரையின் மேல் காயவைத்து விடுவர். இச்செயல் மார்கழி மாதம் முழுவதும் தொடரும்.
அத்துடன் அக்கன்னிப்பெண்கள் தம் வீட்டு முற்றத்தில் சாணம், களிமண் கலந்த கலவை கொண்டு ஒரு சிறிய பொம்மை வீட்டினை வடிவமைப்பர். தைப்பொங்கல் முடிந்தவுடன் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நன்னாள் குறித்து இந்த சிறு பொம்மை வீட்டின் முன்பு அப்பெண்கள் மீண்டும் ஒரு பொங்கல் இடுவர்.
அவ்வாறு இட்ட பொங்கல் தட்டி வைத்த சாண வறட்டிகள் தேங்காய் வெல்லம் முதலியவற்றை ஒரு தாம்பூலத்தில் வைத்துக் கொண்டு நல்லுடை உடுத்திக்கொண்டு ஊரின் அனைத்து கன்னிகளும் கைகோர்த்து ஊர்வலமாய் சென்று அருகிலுள்ள நீர்நிலையைச் சென்றடைவர். அங்கு அனைவரும் விளையாடி மகிழ்ந்து தாம்பூலத்தில் கொண்டு வந்த சாணவறட்டிகளை நீரில் கரைத்து உணவுப் பொருட்களை மீன்களுக்கு இரையிடுவர். முடிந்ததும் ஊர்வலமாய் வீடு திரும்புவர்.
தேவதைகள் வீதியை மெருகேற்றி செல்லும்போது ஊரின் இளங்காளையர்களது நிலைமை சொல்லியா தெரிய வேண்டும்?
எளிதில் சந்திக்க இயலா கன்னியர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் வாய்ப்பு ஆடவர்க்கு வருடத்தின் இந்த நாளில் மட்டுமே கிடைக்கும். அவிழ்த்து விட்ட கன்றுகளைப் போல் கன்னிகளும் தம் காதற்குரியவரை சந்தித்து தம் விருப்பத்தைத் தெரிவிக்கவும் இதுவே வாய்ப்பு. சிறு வீட்டுப் பொங்கல் தினத்தன்று உதிக்கும் காதல் களவியல் பழகி விரைவில் திருமணம் எய்தி கற்பியலாய் வளர்கின்றது.
இன்னாளே பழந்தமிழர்களின் “காதலர் தினம்”. இந்த சிறுவீட்டுப் பொங்கல் சடங்கு இன்னாளில் “காணும் பொங்கல்” என உருமாறிவிட்டதோ என தொனிக்கின்றது. ஆயினும் திருநெல்வேலி நாகர்கோவில் மாவட்ட கிராமங்களில் இக்காலத்திலும் இந்த முறை சிறிய அளவில் நடைமுறையில் உள்ளது.
இன்றைய காலத்தில் இச்சடங்கு தேவையற்றது என தோன்றினாலும் நமது மரபுகளைக் காக்க வேண்டியது நமது கடமையன்றோ! நாத்திகர்களும் பண்டிகை கொண்டாடுவது போல் நாமும் இம்மரபு விழாவைத் தொடர்வோம்!
- ராம் இளன்